நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு -1 வாசிக்க…

மறுநாள் சனிக்கிழமை. காலையில் முன்னதாகவே போய் ஸ்டேஷனில் காத்திருந்தேன். இருவரும் வந்தார்கள். ஜெயன் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். தம்பி இறுகிய முகத்துடன் வந்தான். அவனைப் பார்த்ததும் எனக்கு கண் கலங்கியது. அவன் முன்னே நடக்க நாங்கள் இருவரும் பின்னே நடந்தோம். ஜெயன் ஒரு கடிதத்தை என் கையில் திணித்தார். நான் அவன் பார்க்கும் முன்பு கைப்பையில் ஒளித்தேன். அவன் பார்த்திருப்பான். ஜெயன் கையை பற்றிக்கொண்டார். நான் தம்பியை கண்ணால் ஜாடை காண்பித்து விலக்கிக் கொண்டேன்.

ஒரு டீக்கடையில் தேனீர் குடித்தோம். பிறகு நான் மெல்ல அவனை பெரியார் பஸ் நிலையம் நோக்கி கொண்டு செல்ல முயன்றேன். அவன் அப்போது முரண்டு பிடித்தான். அங்கே வைத்து தான் பட்டுக்கோட்டை வர முடியாது என்றான். நான் பலவித சமாதானம் கூறினேன். நான் அப்பாவை சமாதானம் செய்துவிடுவேன் என்றும், ஒன்றுக்கும் அவன் பயப்பட வேண்டாம் , பரீட்சை வரும் அக்டோபரில் எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தேன். கண்கலங்கி நான் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததை சிலர் கவனிக்க ஆரம்பித்தனர். ஜெயன் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் முகம் கோபம் கொண்டிருந்தது. அவனது பிடிவாதத்தால் அவர் பொறுமையிழந்திருந்தார்.

நான் பேசிக் கொண்டிருக்கும்போதே சாலையில் நின்று கிளம்பிய ஒரு பேருந்தில் ஓடிச்சென்று ஏறிவிட்டான் என் தம்பி. நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன். ஜெயன் அருகில் வந்தார்.

அருணா, விடு, அவன் கைல காசு இருக்குற வரைக்கும் சுத்துவான். அதுக்கப்பறம் தானா வீடு வந்து சேர்வான்.

அவனுக்கு பணம் எதும் கொடுத்தீங்களா?

ஆமா, கேட்டான். கொடுத்தேன். மொத மொத மச்சான்கிட்ட கேக்குறான். இல்லன்னு சொல்லமுடியுமா? கருமின்னு நெனச்சுடுவானே.

’’மச்சான், ஆளப் பாரு’’, எனக்கு ஒரே சமயம் ஆத்திரமாகவும், அவர் முகத்தைப் பார்த்து சிரிப்பாகவும் வந்தது.

இப்ப என்ன பண்றது? அப்பா, அம்மா ரொம்ப எதிர்பார்த்திருப்பாங்க.

ஒண்ணும் இல்ல. போய் விஷயத்த சொல்லு. புரிஞ்சிப்பாங்க. சரி, வா, நாம மீனாட்சி கோவில் போகலாம்.

கோவில் எப்போதும் போல கூட்டமும், கூச்சலுமாக இருந்தது. எனக்கு மிகப் பழகிய இடங்கள், பிரகாரங்கள், சன்னதிகள், மீனாட்சி. அவளிடம் மனமுருகி தம்பிக்காக வேண்டிக் கொண்டேன். அவன் மனம் மாறவேண்டும் என்று. பிறகு எங்கள் இருவருக்காகவும். திருமணம் தடையின்றி நடக்க அவள்தான் அருள்புரிய வேண்டும் என்றும். ஜெயனின் அம்மாவையும் நினைத்துக் கொண்டு அவரின் ஆசியையும் மானசீகமாக வேண்டினேன்.

பிறகு தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சூழல் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஜெயன் என்னை வேறு வேறு விஷயங்கள் பேசி சிரிக்கவைத்தார். அந்த வருத்தமான மனநிலையிலிருந்து என்னை வெளிக்கொண்டு வந்தார். அப்போது நான் உடுத்தியிருந்த மஞ்சள் நிறத்தில் மெரூன் பார்டர் இட்ட காட்டன் புடவை ஜெயனுக்கு மிகவும் பிடிக்கும். அந்த அழகிய மஞ்சள் சேலையில் நெருங்கத் தொடுத்த மல்லிகைப் பூ வைத்து, சிறிய தீற்றலாக வைத்த குங்கும, திருநீற்று கீற்றலில் நான் அழகாக இருப்பதாக ஜெயன் கூறினார். திருமணத்துக்குப் பிறகும் அவருக்கு பிடிக்கும் என்று அதை அடிக்கடி உடுத்துவேன்.

மாலைக்குள் நான் பட்டுக்கோட்டை செல்லவேண்டும் என்பதால் கிளம்ப ஆயத்தமானேன். பட்டுக்கோட்டை வரை தானும் வருவதாக கூறினார். நானும் மறுக்கவில்லை. மாறி, மாறி பேருந்துகளில் போகத் தீர்மானித்தோம். மதுரையிலிருந்து திருப்பத்தூர்[ இது வேலூர் திருப்பத்தூர் அல்ல]. திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி. காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை. புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை.

கடைசி பஸ்சில் மட்டும் ஒன்றாக உட்கார்ந்து பயணம் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டேன். பட்டுக்கோட்டை பயணிகள் யாராவது அப்பாவுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் வம்பு என்று. இருவரும் கிளம்பினோம்.

தாகம் தொண்டையை வறட்டியதால் சர்பத் குடிக்கலாம் என்றார். நான் எனக்குப் பிடித்த ஆரஞ்சு எசென்ஸ் விட்ட எலுமிச்சை ஜூஸை ஐஸ் கட்டிகள் மிதக்க பெரிய கண்ணாடி டம்ளரில் கற்பனை செய்து ஆவலுடன் கடையை நெருங்கினேன். கடையை நெருங்கியதும் ஜெயன் ”ரெண்டு ஜூஸ் உப்பு போட்டு. ப்ளெயின்” என்றார்.

எனக்கு சிறிய அதிர்ச்சி. உப்பு போட்டு அதை குடிப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது. முதல் முதலாக எப்படி மறுப்பது? இந்த சிறுபத்திரிகைக் காரர்கள் எல்லாம் மாற்று ரசனை கொண்டவர்கள் போலிருக்கிறது. பொதுச் சமூகம் என்ன விரும்புகிறதோ அதை விரும்ப மாட்டார்கள் போல என்று நினைத்துக்கொண்டு மல்லுக்கட்டி மருந்து மாதிரி குடித்துவைத்தேன்.

பஸ்ஸில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுத்து சூழல் மறந்து பேசிக் கொண்டே சென்றோம். யாரும் எங்கள் பார்வைப் புலத்தில் படவில்லை. நாங்கள் காதலர்கள் என்பதை பேருந்தே அறிந்திருக்கும். அவ்வளவு கூட்டமில்லை. வெயிலால் பாதிப்பேர் உறக்கத்தில் இருந்தார்கள். கையைப் பற்றிக்கோர்த்துக் கொள்வது, ஏதாவது ரகசியமாக சொல்வதுபோல் காதருகே வந்து மூக்கால் கன்னத்தை உரசுவது, தோள்மீது கைபோட்டுக் கொள்வது என்று ஒரே கிளர்ச்சியுடன் அந்தப் பயணம் இருந்தது. பிற்பாடு அவர் எழுதிய ’அந்த முகில், இந்தமுகில்’ குறுநாவலில் வரும் ராஜமுந்திரிவரை உள்ள பயணத்தை இதன் சாயலுடன் ஜெயன் அமைத்திருப்பார்.

காரைக்குடியில் மதிய சாப்பாட்டுக்காக ஹோட்டல் தேடிச் சென்றோம். சைவ ஹோட்டல். கைகழுவி, முகம் கழுவி மேஜையில் அமர்ந்தோம். பாட்டு ஒன்று ஒலித்தது. ’வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே’ சலங்கை ஒலியில் எனக்குப் பிடித்த எஸ்.பி.பியும் ஷைலஜாவும் பாடியது. ’எனக்கு புடிச்ச பாட்டு’ என்றேன். ’எனக்கு எஸ்.பி.பிய அவ்வளவா புடிக்காது, குரல்ல கிம்மிக்ஸ் பண்ணுவார்’, என்றார். ’என்ன இது, இந்த தீவிர இலக்கியவாதிகளுடன் வாழக் கொஞ்சம் கஷ்டம் தான் போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு பாட்டுகூட அவரோடது புடிக்காதா ஒங்களுக்கு?

இந்த சிரிப்பு, கிம்மிக்ஸ் இல்லாத ஆரம்ப கால பாட்டு புடிக்கும்.

’அய்யோ, அந்த சிரிப்புக்குத் தானே நாங்கள் காத்துக் கிடப்போம்’ என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டேன். ’சரி, அருண்மொழி, உன் காதலுக்கு முதல் பலி எஸ்.பி.பி தான் போலிருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்’ என்று சொல்லிக் கொண்டேன்.

யேசுதாஸ் பிடிக்குமா?

ம்ம்… ரொம்ப.

அப்பாடா. யேசுதாஸ் பிழைத்துக் கொண்டார்.

வெளியில் வந்து பிஞ்சு வெள்ளரியை பார்த்ததும் எனக்கு ஆவல் வந்தது. எப்போது ஊருக்குப் போனாலும் வாங்கிப் போவேன். பஸ்சை சுற்றிவந்து ஜன்னலோரம் விற்பார்கள். தீவிர இலக்கிய ஆட்களின் பட்டியலில் வெள்ளரிக்காய் விலக்கப் பட்ட காயாக இருந்தால். எதற்கும் கேட்டு விடுவோம். “வெள்ளரிக்காய் அம்மாவுக்கு பிடிக்கும். வாங்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்.. வாங்கு . எனக்கும் பிடிக்கும்.” என்றார்.

யோசித்துக் கொண்டேன். திருமணத்துக்கு முன்பு வரை வாலைச் சுருட்டி, அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். பட்டுக்கோட்டையில் அறை எடுத்து அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் ஊர்போவதாக சொன்னார். முதல்நாள் தம்பியுடன் ரயிலில் வந்தபோது அவன் இடையில் எங்காவது இறங்கி சென்றுவிட்டால் என்ன செய்வது என்று சரியாகத் தூங்கவில்லை என்று தெரிவித்தார். எனக்கு பாவமாக இருந்தது.
புதுக்கோட்டை சென்றவுடன் நான் முன்புறம் சென்று அமர்ந்துகொண்டேன். அவர் பின்புறம் அமர்ந்து சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டார். பட்டுக்கோட்டை வந்ததும் இறங்கி அவரிடம் கண்களாலேயே விடைபெற்று வளவன்புரம் செல்லும் டவுன்பஸ்சில் போய் ஏறிக்கொண்டேன். வீட்டிற்கு தம்பியில்லாமல் செல்வது கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

வீட்டில் அம்மா, அப்பா, அத்தை, மாமா, பத்தூர் சித்தி, சித்தப்பா எல்லோரும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். என்னை மட்டும் பார்த்ததும் எல்லோரும் குழம்பினர். அம்மாவின் கண் கலங்கியது. பொட்டுகூட வைத்துக் கொள்ளாமல் அம்மா முகம் அழுது, வீங்கி, வெறிச்சோடியிருந்தது. நான் சென்றவுடன் அம்மாமீது சாய்ந்து அழுதேன். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பஸ் ஏறியதை சொன்னேன்.

’’நீ ஏன் பாப்பா அழுவுற? காசு இல்லன்னா போக்கத்தவன் தன்னால வருவான் பாரு’’ என்றார் அப்பா.

மாமா ’’அருணா, நீ அவன் தருமபுரி போயிருக்கான். மதுரையிலேர்ந்து கூட்டிட்டு வரேன்னு ஃபோன்ல சொன்னதா ஹெச்.எம் சொன்னாராமே. யார் அங்க அவனுக்கு தெரிஞ்சவுங்க?’’ என்றார்.

அவசரத்தில் ஹெச்.எம்மிடம் உளறி வகையாக மாட்டிக்கொண்டு விட்டோமே என்று தோன்றியது . இனி இதை பக்குவமாக டீல் செய்ய வேண்டும். ’’இல்ல மாமா, யாரோ அவனுக்கு தெரிஞ்ச ரைட்டர் ஒருத்தர் அங்க இருக்காராம். அதனால அவர தேடி போயிருக்கான். அவர்தான் அவன மதுர வர கூட்டிட்டு வந்து விட்டார். நான் காலைல ஸ்டேஷன்ல வச்சு பாத்தேன். அப்புறம் நான் அவன தனியா கூட்டிட்டுபோய் சமாதானம் பண்ணேன். அப்பாகிட்ட நான் சொல்லி சமரசம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லியும் கேக்காம போய் ஓடுற பஸ்ல போய் ஏறிட்டான். அவர் கூட எதிர்பாக்கல. அதிர்ச்சியாயிட்டார். அப்புறம் நீங்க போய் வீட்ல சொல்லுங்க, ஒங்க அப்பா, அம்மா எல்லோரும் எதிர்பாத்துட்டிருப்பாங்க என்றார். அவர் தருமபுரி கிளம்பினார். நான் இங்க வந்துட்டேன்’’ என்றேன்.

நான் சொன்ன இந்த பாதிகட்டுக்கதையை எல்லோரும் முழுவதும் நம்பினார்கள். எனக்கு இப்படி பொய் சொல்கிறோமே என்று குற்ற உணர்வு ஒருபுறமும், கிளுகிளுப்பு ஒரு புறமும் வந்தது. அப்புறம் வழக்கம்போல் மாறி, மாறி எல்லோரும் இதைப்பற்றியும், அவன் படிப்பில் சொதப்பியது குறித்தும், அப்பாவின் அதீத கண்டிப்பும், அம்மாவின் செல்லமும் அவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது பற்றியும் பேசிக்கொண்டனர். ஒருவகையில் பேசிப்பேசி எளிதாக்கி அச்சூழ்நிலையை அவர்கள் கடக்கமுயல்வதை புரிந்து கொள்ளமுயன்றாலும் எனக்கு அது மிகுந்த ஆயாசத்தை தந்தது.

நான் தூக்கம் வருவதாக கூறி சாப்பிட்டுவிட்டு போய் படுத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை. மனம் முழுவதும் ஜெயன் நினைவுதான். மிக அருகே அமர்ந்து பஸ்ஸில் செய்த அந்தபயணம் தந்த கிளர்ச்சி என்னைத் தூங்கவிடவில்லை. அவர் முகம், புன்னகை, கையை வருடியபடியே அவர் பேசியவை, மூக்கால் கன்னத்தை உரசிய அந்தக் குறும்பு, வியர்வை மணம் எல்லாம் சேர்ந்து வெட்கத்தையும், புன்னகையையும் வரவழைத்தது. அவரும் இதே பட்டுக்கோட்டையில் என்னை நினைத்துக்கொண்டே தூக்கம் வராமல் என்னைப் போலவே இருப்பார் என்பதை கற்பனைசெய்து தலையணையில் குப்புற முகம் புதைத்து பிறகு எப்போதோ உறங்கிப்போனேன்.

மறுவாரம் மதுரையில் கல்லூரியில் தொடர்ந்து அசைன்மெண்ட்கள், சிறுதேர்வுகள் இருந்தன. சனிக்கிழமை பாதிநாள் தியரி வகுப்பு இருக்கும். வந்து சாப்பிட்டு ஒரு தூக்கம்போட்டு எழுந்தால் மாலை ஒரு திரைப்படம் ஆடிட்டோரியத்தில் இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக போகவேண்டும். மாமி எங்களை பத்திக் கொண்டு செல்வாள். நாசரேத், சாத்தான்குளம் தீவிர பெந்தகோஸ்து பிள்ளைகளுக்கும் விலக்கில்லை. அவர்கள் முணுமுணுத்தபடியே எங்களுடன் வருவார்கள்.

ஜெயன் அதற்கு அடுத்தவாரம் வருவதாக சொன்னார். எனக்கு ஒருநாள் முழுதும் செலவழிக்க நேரம் இல்லை. எனவே ஞாயிறு மீனாட்சி கோவிலில் சந்தித்து பேசி பிரிந்தோம். நேரம் சீக்கிரம் ஓடி விடுவதுபோல் இருக்கும். இந்த மூன்றுமணி நேரத்துக்காக அவர் ரயிலில் பயணம்செய்து வருவது எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் குற்றவுணர்வையும் கொடுக்கும். ஆனால் காட்டிக் கொள்ளமாட்டேன். ஒருவாரம் விட்டு மறுவாரம் வருவதாக சொல்லிச் சென்றார். கடிதங்கள் வழக்கம்போலவே இருபுறமும் பறந்துகொண்டிருந்தன. கடிதங்களில் காதலன் பாவம் மறைந்து கணவன் பாவம் தென்பட்டது. உரிமையும் கொஞ்சலும் அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டிருந்தன. என்னை நாணிக் கண் புதைக்கச் செய்யும் வரிகள்.

திடீரென்று ஒரு நாள் ஹாஸ்டல் மீட்டிங்கின்போது எங்கள் விடுதியின் வார்டன் பெண்மணி ஒரு விஷயம் சொன்னார். ’’இனிமே ஒங்களுக்கு வரும் லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணுவோம்’’ என்று. எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு வயிற்றைக் கலக்கியது. எப்படியும் அதிக எண்ணிக்கையிலும், பக்க அளவிலும் அசைன்மெண்ட்கள் போல் எனக்குதான் வந்துகொண்டிருந்ததால் நான் மாட்டி விடுவேன். நிச்சயம் அப்பாவுக்கு தெரிவித்துவிடுவார்கள். என் அப்பா வந்து வார்டனின் முன்பும், கல்லூரி டீன் முன்பும் தலைகுனிந்து என்னுடன் நிற்கும் காட்சியை கற்பனைசெய்து எனக்கு தலைசுற்றியது.

என் விடுதியிலேயே நான் ஜெயனைக் காதலிப்பதை பகிர்ந்துகொள்ளும் என்னுடைய ஒரே தோழி அனுராதாதான். அவளும் நானும், அமுதாவும் ஒரே அறைதான். அமுதா ஒழுங்கான பிள்ளை. காதல் என்பதெல்லாம் ஒழுங்கீனமானவர்கள் செய்வது என்று நினைப்பவள். அனுராதா பெங்களூரைச் சேர்ந்தவள். கன்னடம். ஆனால் தமிழ் நன்றாகப் பேசுவாள், படிப்பாள். அவள் பாட்டிவீடு தேனி அருகே உள்ள உத்தமபாளையம். அங்கு தங்கி படித்தவள்.

நான் சொல்லாமலேயே முதல் இரண்டு வாரத்தில் ஜெயனைக் காதலிப்பதை தெரிந்துகொண்டாள். என்னிடம் கேட்டாள்.

ஏய், பொண்ணே, லவ்ல இருக்கியாடி?

எப்டி கண்டுபிடிச்ச அனு?

இது பெரிய வித்தையா? ஒன் மூஞ்சப் பாத்தாலே தெரியுதே. எப்ப பாரு ட்ரீமடிச்சுட்டு இருக்க. கத்தை, கத்தயா லெட்டர்ஸ் வருது. மணிக்கணக்கா, படிக்கிற. சொல்லுடி.

ஆமா… அனு, ஒங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தேன். அவர் ரைட்டர், மலையாளி, தருமபுரில இருக்கார். நாங்க இப்போ இந்த கோர்ஸ் முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.

வீட்ல சொல்லிட்டியா?

இல்ல… சொல்லி கன்வின்ஸ் பண்ணனும்.

சரி… அதப்பத்தி இப்ப யோசிக்காத. எஞ்சாய்..

மறுநாள் நான் ஜெயனுக்கு ட்ரங்க் கால் புக் செய்து பேசினேன்.

ஹலோ, ஜெயன். நான் அருணா பேசுறேன்.

என்ன அருணா, பதட்டமா இருக்க? ஏதாவது பிரச்சனையா?

இங்க இனிமே லெட்டர்ஸ பிரிச்சு ராண்டமா செக் பண்ணப் போறாங்களாம். அனேகமா நாந்தான் மாட்டுவேன். அதுனால…

என்ன அராஜகமா இருக்கு. லெட்டர்ஸ் ஒருத்தங்களோட பிரைவஸி இல்லயா? நீங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலயா?

நாங்க என்ன ஒங்கள மாரி தொழிற்சங்கமா வச்சுருக்கோம் போராடுறத்துக்கு. சொல்றத கேளுங்க. சின்ன கடிதம் போதும். அதுவும் டெய்லி வேண்டாம். அனுராதான்னு அட்ரஸ் போட்டு எழுதுங்க. நான் அவகிட்ட சொல்லிக்குறேன். ஃப்ரம் அட்ரஸ் ஜெயந்தின்னு போட்டு எழுதுங்க. கோட் வேர்ட்.

சே…சே… கேவலமா இருக்குடி.

காதல நம்ம சொசைட்டி கேவலமாத் தான் நெனைக்குது, ஜெயன்.

அனுவிடம் தெரிவித்தேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கடிதம் எழுதினார். நான் சொன்னமாதிரியே. ஆனால் ஃப்ரம் அட்ரஸ் மட்டும் மலையாள லிபியில் எழுதினார். அவள் பிரிக்காமல் என்னிடம் தந்தாள். எனக்கு ஜெயனை நினைத்து பாவமாக இருந்தது.

ஆனால் இருவாரங்களில் இப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. முதுகலை படிக்கும் மாணவிகள் கடுமையாக இதை எதிர்த்து கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். ஏனெனில் அவர்களில் சிலர் காதலில் இருந்தனர். சிலர் திருமணம் முடித்து கணவனைப் பிரிந்து இங்கு விடுதியில் தங்கிப் படித்தனர்.

அடுத்த ஞாயிறு முழுநாளும் நாங்கள் காலை முதல் மாலை வரை சிட்டன்குளம் கரையில் அமர்ந்து பேசினோம். அதில் திருமணம் குறித்து ஜெயன் தீவிரத்துடன் பேசினார். நான் வழக்கம்போல் ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.

அருணா, சீரியஸா யோசிக்கணும். நீ நம்ம கல்யாணம் பத்தி என்ன ஐடியா வச்சிருக்க?

தாலி கட்டி, மால மாத்தி அப்டித்தான பண்ணுவாங்க.

அறிவுகெட்ட முண்டம், ஒழுங்கா சொல்லுடி.

எப்ப கல்யாணம் ஜெயன்?

ஒனக்கு இந்த கோர்ஸ் எப்ப முடியுது? டீடைல்ஸ் சொல்லு.

ஜூன் செகண்ட் வீக்ல இருந்து ஜுலை ஃபர்ஸ்ட் வீக் வர மூணுவாரம் ஆல் இண்டியா டூர் இருக்கு ஜெயன். அது முடிச்சு வந்து அனேகமா ஜூலை கடசி கோர்ஸ் முடிஞ்சிடும்.

ஃபைனல் எக்சாம் எல்லாம் முடிஞ்சிடுமா?

ஆமா. நாலு வருஷம் முடிச்சு நாங்க சுதந்திரப் பறவயா பறந்து போவோம்.

செர்டிஃபிகேட்ஸ்?

அது ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ கழிச்சு கெடைக்கும்.

சரி, நம்ம கல்யாணம் ஆகஸ்டில ரெண்டாம் வாரம் கழிச்சு நடந்தாகணும். ஏன்னா அப்ப தான் ஆவணி பொறக்குது.

எப்ப பொண்ணு பாக்க வருவீங்க?

வெளயாடுறியா? இல்ல சீரியசா பேசுறியா?

சீரியஸ் ஜெயன். அண்ணன்ட்ட சொல்லி அவரையும் கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்கள்ள?

அப்ப சொன்னேன். இப்ப யோசிச்சு பாத்தேன். நாம யாருக்கும் தெரியாம ரெஜிஸ்டர் மாரெஜ் பண்றதுதான் நல்லதுன்னு தோணுது, அருணா.

ஏன் ஜெயன்? எங்க அப்பாக்கு பெரியார்மேல இண்டிரெஸ்ட் உண்டு. ஒத்துப்பாங்க. இல்லாட்டியும் எங்க அத்த, மாமா என்ன புரிஞ்சிப்பாங்க. நான் அவங்ககிட்ட சொல்லி அப்பாட்ட பேச வச்சு சம்மதிக்க வச்சிடுவேன்.

இல்ல. பெரியார் எல்லாம் கொள்கை அளவுலதான். ஒங்க அப்பா மாதிரி ஆளுங்களுக்கு ஜாதிப்பற்று, இனப்பற்று ரொம்ப இருக்கும். நான் மலையாளி என்பது அவங்களால ஜீரணிக்க முடியாததா இருக்கும். கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க. அப்றம் எனக்கு அப்பா, அம்மா இல்ல. நெறய சொந்தங்கள் எதுவும் இல்ல. அண்ணன், தங்கச்சி மட்டும்தான். எல்லாமே மைனஸ் பாயிண்ட்ஸ்.

அப்டியா? அப்ப நான் தெரியாம பொறப்பட்டு வரணுமா?

ஆமா, ஆகஸ்ட்ல எப்ப வரணும்னு நான் அப்றம் சொல்றேன். மாரேஜ் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிட்டா நம்மள ஒண்ணும் பண்ண முடியாது. அப்றமா அவங்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கால்ல விழுந்துடலாம். மன்னிச்சா மன்னிச்சு ஏத்துப்பாங்க.

எனக்கு கலக்கமாக இருந்தது. அப்பா, அம்மா, என் உறவுகள் என்னை வாழ்நாள் முழுவதும் புறக்கணித்துவிட்டால். நினைக்கவே நடுக்கமாக இருந்தது. ஜெயனும் புரிந்துகொண்டு மிக ஆறுதலாக பேசினார். ’உன் பெற்றோர் உன்மேல் உயிரையே வைத்திருப்பவர்கள். மன்னித்து விடுவார்கள். உடனே இல்லாவிட்டாலும் நமக்கு குழந்தை பிறந்தபிறகு சேர்ந்துவிடுவார்கள்’. குழந்தை என்றவுடன் எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நமக்கு கொஞ்ச ஒரு குழந்தை என்ற நினைவே தித்திப்பாக தோன்றியது.

’’அருணா, உனக்கு 21 வயது முடிந்துவிட்டதா? .அப்பதான் மாரேஜ் செல்லுபடியாகும்’’ என்றார்.

இருவரும் விரல்விட்டு எண்ணிப்பார்த்தோம். எனக்கு அந்த மார்ச்சோடு 21 வயது முடிந்திருந்தது. அப்போது மேமாதம் நடந்துகொண்டிருந்தது. அவர் அண்ணனிடமும் திருமணம் முடிந்தபிறகுதான் தெரிவிக்கப் போவதாக சொன்னார். அவர் இப்படியான திருமணத்துக்கு எதிரானவர். கொஞ்சம் பழமைவாதி என்றார்.

பிறகு நான் எங்கள் கல்லூரியின் இந்திய சுற்றுலா பற்றிக் கூறினேன். கடிதங்கள் போடமுடியாது என்றவுடன் அவர் முகம் வாடியது. ’’ஏன் மூணுவாரம் வச்சிருக்காங்க,’’ என்றார்.

’’நாக்பூர், ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜோத்பூர், லூதியானா, டெல்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹரித்துவார், டேராடூன் எல்லாம் போறோம்’’, என்று அடுக்கிக் கொண்டே போனேன். பிறகு சுந்தரராமசாமி அவர்களின் கடிதம் எனக்கு வந்ததை தெரிவித்தேன். சு.ரா என்ன எழுதியிருந்தார் என்று கேட்டார்.

நீங்க என்னப் பத்தி நெறய அவர்ட்ட சொல்வீங்களாம். அப்றம் என்னோட வாசிப்பு பத்தி அவர்க்கு சந்தோஷம் என்றார். நீங்க இப்பதான் நெறய கிரியேட்டிவ்வா எழுத ஆரம்பிச்சுருக்கீங்க. அருண்மொழியின் கடாட்சம்தான் காரணம் என்று எழுதியிருக்கார். ஜெயன் புன்னகைத்துக் கொண்டே இருந்தார்.

மாலையில் திரும்பும்போது அதே மரத்தடியில் அணைப்பும், முத்தங்களும். தடித்த அடிமரம் கொண்ட அம்மரம் உண்மையில் ஒருபக்கம் கொடியடர்ந்த வேலியும் மறுபுறம் தனிமையான குளக்கரை சூழ இருப்பது ஒரு அடைக்கல உணர்வைத் தந்தது.

தொடர்ந்து இருவாரங்கள் வேலைகளும் படிப்பும் இருந்தன. மே 21, 1991. அன்று இந்திய அரசியலில் ஒரு துரதிருஷ்டமான நாள். அன்றுதான் மனித வெடிகுண்டினால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. 1984 முதல் 1989 வரை பிரதமராக இருந்தவர். போஃபோர்ஸ் ஊழல் 1989ல் வெளிவந்து அது அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. வி.பி.சிங் வெற்றிபெற்று ஒரு வருடம் ஆட்சி செய்தார். அந்தக் கட்சிக்குள் ஏகப்பட்ட குளறுபடிகள். சந்திரசேகர் அடுத்த வருடம் பிரதமரானார். அரசில் நிலையின்மை நிலவி மீண்டும் 1991 ல் பாராளுமன்றத் தேர்தல் வந்தது.

அதற்கு காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு வந்தபோதுதான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். மனிதவெடிகுண்டான தனுவும் பலியானாள். நாங்கள் தூர்தர்ஷன் முன் பழியாய்க் கிடந்தோம். திரும்பத் திரும்ப அந்தக் காட்சிகளைக் காட்டியது எங்களுக்கு கலக்கத்தை உண்டுபண்ணியது. ‘அமுல் பேபி மாதிரி இருந்தாரே, போய் சேந்துட்டாரே’ என்று எல்லோரும் புலம்பினோம். தமிழ்நாட்டில் வைத்து கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. செய்தித் தாள்களும், ஜூனியர் விகடனும் மனமகிழ்மன்ற அறையில் கிழிபட்டன. போட்டிபோட்டு படித்தோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. போலீஸும் சி.பி.ஐயும் திணறின.

இருநாட்கள் கழித்து ஜெயனிடமிருந்து ஹாஸ்டலுக்கு ஃபோன்.

அருணா, நீ பத்திரமா இருக்கேல்ல.

என் பத்தரத்துக்கு என்ன கொறச்சல்?

இல்லடி. எங்க பார்த்தாலும் பரபரப்பா இருக்கு. நீ சும்மா கண்ட நேரத்துல டவுனுக்கு போகாத.

கண்ட நேரத்துல எங்கள வுட மாட்டாங்க. நா போமாட்டேன்.

சரி, டூர் உண்டா?

டூர் உண்டே. அது எங்க சிலபஸ்ல ஒரு பாடம்,ஜெயன். கடசி வருஷம், கடசி ட்ரைமஸ்டர்.

அது ரிஸ்க். இன்னம் குற்றவாளிகள புடிக்கல, தெரியுமா?

தெரியும். வேறென்ன? வைக்கவா?

அருணா. ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே?

என்ன சொல்லுங்க, கேட்டுட்டு முடிவு பண்றேன்.

அதுவந்து… நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவா ஒரு கட்டுரை மலையாளத்துலயும், காலச்சுவடுலயும் எழுதுனதால ரெண்டு போலீஸ்காரங்க ரெண்டு நாள் கழிச்சு என் ரூமுக்கு வந்து விசாரிச்சாங்க. என்ன ஒண்ணும் சொல்லல. ஆனா ரூம்ல இருந்த பத்திரிகைகள், துண்டு பேப்பர்கள், எழுதிய மானுஸ்கிரிப்டுகள், கடிதங்கள் எல்லாத்தையும் தொடச்சி எடுத்துட்டு போயிட்டாங்க.

நான் எழுதுனது?

அதுவும்தான்.

பெர்சனல்னு சொல்ல வேண்டியதுதானெ? வாயில கொழுக்கட்டையா வச்சிருந்தீங்க.

நான் சொல்றத எங்க கேக்குறான்?

லவ் லெட்டர கொண்டுபோய் என்ன பண்ணப் போறாங்க? அய்யோ, சே , கேவலமா இருக்கு. கண்டவனும் படிப்பான். அவங்க எல்லாரும் டேபிள சுத்தி ஒக்காந்து என் லெட்டர படிச்சு சிரிக்கறத நெனச்சாலே நாக்க புடிங்கிக்கலாம் போல இருக்கு. ஒங்களுக்கு வீரமே இல்ல. துணிஞ்சு சொல்ல வேண்டியதுதான.

சொல்லிப் பாத்தேன். ஆனா ரொம்ப எதுத்தா சந்தேக கேஸ்ல என்ன உள்ள வச்சுட்டாங்கன்னா.

அய்யோ, சரி விடுங்க. போனாப் போகுது.

அ.மி, சு.ரா, கோணங்கி, பாவண்ணன், யுவன் எல்லாக் கடிதங்களும் போயிடுச்சி.

எனக்கு பாவமாக இருந்தது. ஆறுதல் சொல்லி ஃபோனை வைத்தேன்.

எல்லா சாலைகள் , வாகனங்கள், ரயில்கள், வான் வழி, கடல் வழி அனைத்தும் கண்காணிக்கப் பட்டன. ஆனால் முருகன், சாந்தன், ஒற்றைக்கண் சிவராசன், இன்னும் சிலரும் உட்பட அனைவரும் ஒரு பால் டேங்கர் லாரியில் அமர்ந்து பெங்களூருக்கு தப்பியது இருமாதங்கள் கழித்துதான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒரு ஒட்டைவழியே ஏணிவைத்து அதில் இறங்கி உட்கார்ந்து பயணம் செய்யமுடியும் என்பதை நம் காவலர்களால் யூகிக்க முடியவில்லை. இந்த வழக்கை துப்புதுலக்கிய கார்த்திக்கேயன் என்னும் சி.பி.ஐயின் புலனாய்வு அதிகாரியின் உதவி அலுவலராக இருந்த ரகோத்தமன் எழுதிய ராஜிவ் காந்தி படுகொலை குறித்த புத்தகத்தை நான் திருமணத்திற்கு வெகு நாட்களுக்கு பிறகு ஒரு திரில்லர் நாவலின் பரபரப்புடன் படித்தேன்.

நாங்கள் டெல்லி செல்லும் நாளும் வந்தது. அதற்கு இருநாட்களுக்கு முன்  ஜெயன் ஃபோன் செய்தார்.

அருணா , ஒனக்கு எத்தன மணிக்கு ட்ரெயின்?

சாயந்தரம் நாலுமணி, வைகை எக்ஸ்பிரஸ். மதுரயிலர்ந்து மெட்ராஸ். அங்க செண்ட்ரல். அங்கருந்து டெல்லிக்கு.

நான் ஒரு மூணுமணிக்கு மதுர ஸ்டேஷன் வரேன்.

எதுக்கு?

ஒன்ன ஏத்திவிட. டாட்டா காமிக்க.

பைத்தியமா ஒங்களுக்கு. டாட்டா காமிக்க அவ்ளோதூரம் பயணம் பண்ணி வரணுமா?

இல்ல, வருவேன்.

என் ஃப்ரெண்ட்ஸ், டீச்சர்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சுபோயிடும்.

தெரியட்டும்.

பிடிவாதம் பிடித்தார்.

சரி, வாங்க.

காதலின் பித்துநிலை என்பது இதுதானா? எந்த தர்க்கங்களையும், ஒழுங்குகளையும் கைக்கொள்ள மறுக்கிறது அது. ஒப்பிட நான் கொஞ்சம் தரையில் நின்றிருக்கிறேன் எனத் தோன்றும். அவர் பிடிவாதத்தை உள்ளூர ரசித்தேன்.

ரயில் நிலையம் சென்றபோது காத்து நின்றிருந்தார். நான் லக்கேஜ்களை ரயில்பெட்டியில் வைத்துவிட்டு இறங்கி அவர் அருகே சென்றேன். ரயில் கிளம்ப இன்னும் அரைமணிநேரம் இருந்தது.

எதுவும் பேசத் தோன்றவில்லை. கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

ஜெயன், லெட்டர் எழுதமுடியாது. நீங்களும் போட வேண்டாம். கஷ்டமா இருக்கா?

ரொம்ப. ஒன் பழய லெட்டர் எல்லாம் திரும்ப படிக்கலாம்னா அதுக்கும் வழியில்ல.

என் கோழிசீச்ச கையெழுத்து லெட்டருக்கு இவ்ளோ மவுசா?

பின்ன, நான் எப்டி காத்திருப்பேன் தெரியுமா, அருணா? காலையில 6.30 மணிக்கு டீக்குடிச்சுட்டு போய் போஸ்ட் ஆஃபீஸ் வாசல்ல காத்திருப்பேன். ஒரு ஏழர மணிக்கு தான் பிரிச்சு போஸ்ட்மேன் தருவாரு. அங்கயே நின்னு படிச்சுருவேன்.[ இச்சம்பவத்தை பிறகு அந்த போஸ்ட்மேன் வாயாலேயே நான் ஒருமுறை கேட்டேன். திருமணத்துக்குப் பிறகு அதே தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் நான் வேலை பார்த்தபோது தபால்காரர் மாதேஸ்வரன் சொன்னார்.’ நீங்க மதுரையிலேர்ந்து போடற லெட்டருக்கு ஆறர மணிலேர்ந்து அந்த மரத்தடியே கதின்னு நிப்பார். நான் எல்லா லெட்டரும் பிரிச்சு அடுக்க ஏழர ஆயிடும். போய் குடுப்பேன். அங்கயே பிரிச்சு படிப்பார். ஒங்க காலேஜ் அட்ரஸப் பாத்து நான் லவ் லெட்டர்னு யூகிச்சுட்டேன். எடையில வெத்தல பாக்கு எச்சி துப்ப போனாகூட என்னயே பாப்பார். பாவமா இருக்கும்’. நான் அந்த நாவல்மரம் அடியில் நகம் கடித்தபடி நிற்கும் ஜெயனை கற்பனை செய்வேன். லலிதாங்கிக்காக மரமல்லி அடியில் காத்து நிற்கும் பித்துநிறைந்த திருவடியேதான்.] 

ஜெயன், எல்லாரும் பாக்குறமாதிரி இருக்கு. தெரிஞ்சா என்ன கிண்டலடிச்சே கொன்னுருவாளுங்க. அனுவுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். அவ புரிஞ்சிப்பா. அந்த கடைகிட்ட போய் நிக்கலாம். கொஞ்சம் மறைவாயிருக்கு.

ஹிக்கின்பாதம்ஸ் அருகே போய் நின்றுகொண்டோம். காஃபி வாங்கிக் குடித்தபடியே பேசினோம். அங்கு போனதும் வழக்கம் போல் புத்தகத்தை  பார்க்கத் தொடங்கிவிட்டார்.

என்ன பாக்க வந்தீங்களா? புத்தகம் வாங்க வந்தீங்களா?

உடனே திரும்பினார். நான் என் கையில் இருந்த கல்குதிரை தாஸ்தாவெஸ்க்கி சிறப்பு மலரைக் காண்பித்தேன்.

வந்துருச்சா? இதில நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் . பாத்தியா?

நேத்துதான் வந்துச்சு. பாத்தேன். ஆனா மொதமொதல்ல சு.ரா கட்டுரை தான் படிச்சேன். இவான் பத்தி என்ன அழகா எழுதி இருக்கார், ஜெயன்.

அவர் முகம் கொஞ்சம் வாடியது. ’’அப்ப என் கட்டுரை இன்னும் படிக்கல நீ?’’

இல்ல, சீனியாரிட்டி பிரகாரம். ட்ரெயின் போய்ச் சேர மூணு பகல், ரெண்டு ராத்திரி ஆகும் ஜெயன். படிச்சிருவேன்.

சரி, அங்க வடக்கத்தி ஆளுங்க தமிழங்க மேல கோவத்துல இருப்பாங்க. எல்லா எடத்துலயும் ஜாக்ரதையா இரு. வெயில் அதிகம் இருக்கும். ஆரஞ்ச் நெறய, மத்த பழங்கள் வாங்கி சாப்பிடு.

ட்ரையின் கிளம்ப அஞ்சு நிமிஷம்தான் இருக்கு ஜெயன். நான் வரேன். அப்றம் ஒங்க கட்டுரைதான் மொதமொதல்ல படிச்சேன். மன்னிக்காதே நெல்லி. ரொம்ப நல்லாயிருக்கு. போகட்டா?

நான் ஓடிப்போய் ஏறிக்கொண்டேன்.

பிரமிப்புடன் பார்த்தார். மாலை ஒளியில் ஜெயனின் புன்னகைபூத்த முகம் சுடர்ந்தது. கடவுளே, நான் வாசிப்பது இவருக்கு இவ்வளவு இன்பத்தை தருகிறதா? மகிழ்ச்சியுடன் தலையாட்டி விடைபெற்றேன்.

ஒவ்வொரு ஊரும் எங்களுக்கு புது அனுபவத்தை தந்தது. ரயிலிலும் சோதனைகள். காவலர்கள் வந்துகொண்டே இருந்தனர். எங்கள் நூற்றி ஐந்து மாணவ, மாணவிகளில் கிருஷ்ணகுமாரி என்ற பெண் கொஞ்சம் சுருண்ட முடியுடன் தனு சாயலில் இருப்பாள். அவள் கொஞ்சம் அப்பாவி. நாங்கள் அவளிடம் ”கிருஷ்ணா, போலிஸ் வரும்போது நீ பெர்த்துக்கு அடில ஒளிஞ்சுக்கோ.’’எனச்சொல்ல அவள் உண்மையில் அதைநம்பி ‘’அடில போகமுடியுமா, பாக்கட்டா’’ என்று கேட்டு எங்களை சிரிப்புமூட்டினாள்.

கல்குதிரையில் படிக்க நிறைய இருந்தது. நான் அதில் மூழ்கிப் போனேன். டூரில் சுற்றும் சுற்றுலா இடங்கள் எல்லாமே பிடித்திருந்தன. ஏதாவது வேளாண் ஆராய்ச்சி இடங்கள், பல்கலைக் கழகங்கள், விதைப் பண்ணைகள் எங்களை சோதித்தன. அதில் வேலைபார்க்கும் பலருக்கும் ஆங்கிலம் வரவில்லை. முதலிரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் கூறிவிட்டு பிறகு ஹிந்திக்கு தாவினர். நாங்கள் அனைவரும் தலைகால் புரியாமல் விழித்தோம். எரிச்சலாக இருந்தது. கொடுக்கும் துண்டுப் பிரசுரம்போன்ற காகிதங்களை பத்திரப் படுத்திக்கொண்டோம். அதைவைத்து கல்லூரி சென்று அசைன்மெண்ட் செய்யவேண்டும் என யோசனை செய்தோம்.

தென்னிந்திய சாப்பாடு எங்கும் கிடைக்கவில்லை. சோற்றைப் பார்த்தே பத்துநாளாகியிருந்தது. மூன்றுவேளையும் சப்பாத்தி முகத்தில் அடித்தது. முதல்முதலில் ஹரித்துவாரில் தென்னிந்திய ஹோட்டலை பார்த்து மனம் மலர்ந்தோம். பாதி வெந்த அரிசிச் சோறு எங்களுக்கு தேவாம்ருதமாக இருந்தது. டெல்லி கரோல்பாக்கில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம். அங்குப் பக்கத்தில் ஒரு தபால்நிலையம் இருந்தது. போய் இரண்டு மூன்று என்வலப்புகள் வாங்கிக் கொண்டேன். சுற்றுலாவில் வைத்து கடிதம் எழுத தனிமை கிடைக்காது என்ற எண்ணத்தில் நான் ஊரிலிருந்து எதுவும் வாங்கி வரவில்லை.

ஐந்து நாட்கள் கரோல்பாக்கில் தங்கியதால் கடிதம் எழுத தனிமையும் கிடைத்து ஆசையும் வந்தது.

அன்புள்ள ஜெயன்,

கரோல்பாக்கில் இருந்து உன் கண்மணி எழுதுவது. [ஹை, எவ்ளோ கவித்துவமா வருது. இந்த இடத்தில் ஜெயன் புன்சிரிப்பார்].

ஜெயன், வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. உன்னை நினைக்காத நேரமில்லை. பொய்யில்லை. எல்லா தருணங்களிலும், சிந்தனைகளிலும் கலந்து விட்டிருக்கிறாய். முதலில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ,ஜோத்பூர் என ராஜஸ்தானில் சுற்றினோம். இந்த இடங்களுக்கு லோக்கல் டூரிஸ்ட் பஸ்ஸில் தான் சென்றோம். அரண்மனைகள், முக்கிய இடங்கள் பார்த்தோம்.

எல்லாமே அழகியவை. இந்த காய்ந்த பூமியில் அந்த ராஜபுத்திர மன்னர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் வந்தது என்ற வியப்பு வந்துகொண்டேயிருந்தது எனக்கு. அப்படிப்பட்ட ஆடம்பர அரண்மனைகள், குளிர்கால அரண்மனை தனி, கோடைக்கால அரண்மனை தனி. இங்கே வெயில் கொல்கிறது. மதுரை கூட சொர்க்கம்தான் இங்கு வந்தால். இரண்டு கைக்குட்டை வைத்து ஒன்றுமாற்றி ஒன்று நனைத்து முகத்தில் போட்டுக்கொள்வோம். பஸ்ஸின் காற்றில் ஐந்து நிமிடத்தில் உலர்ந்துவிடும். மூக்கு, நாக்கு, தொண்டையெல்லாம் எரிகிறது. தயிர்தான் எங்களைக் காக்கிறது. குட்டி மண்பாத்திரங்களில் அதிகம் கிடைக்கிறது. அது தான் இப்போது எங்களுக்கு அமிர்தம்.

பஞ்ஜாபில் லூதியானா வேளாண் பல்கலைக் கழகம் போனோம். மிகப்பெரிய அழகிய வளாகம். அமிர்தசரஸில் பொற்கோவில் பார்த்தோம். உள்ளே அனுமதியில்லை. 1984 க்கு பிறகு. மதுரா, ஆக்ரா எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது. தாஜ் மஹாலை மொட்டைமதிய வெயிலில் பார்த்தோம் ஜெயன். கண்கூசியது. அதை ஷாஜகான் தன் சிறையில் இருந்தவாறு பார்க்க ஔரங்கசீப் செய்த ஒரு ஏற்பாட்டைப் பற்றி கைடு கூறினார். எனக்கு கண்கலங்கியது. அவ்வளவாவது அவருக்கு கருணை இருந்ததே என்று நினைத்துக்கொண்டேன். ஜெயன், நம் திருமணம் முடிந்து இங்கு எப்போதாவது வந்தால் தாஜ்மஹாலை முழுநிலவில் யமுனைக் கரையில் அமர்ந்து பார்க்கவேண்டும். இதையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

டெல்லியில் ஜும்மா மசூதி, குதுப் மினார், செங்கோட்டை, அக்பர் ஃபோர்ட், மியூசியம், பார்லிமெண்ட் ரோட், இண்டியா கேட், நேரு, காந்தி, இந்திரா சமாதி உட்பட நிறைய இடங்கள் பார்த்தோம். இந்திரா காந்தி சமாதியில் இருந்த சிறிய மியூசியத்தில் அவர் அந்தக் காலைநடையில் உடுத்தியிருந்த சேலையை வைத்திருந்தார்கள் ஜெயன். பதிமூன்று குண்டுகள் துளைத்த பொத்தல்கள் அச்சேலையில். எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. முன்னே சென்ற தனது பாதுகாவலன்  திரும்பி தன்னைச் சுடும் அக்கணம் அவர் மனதில் என்ன சிந்தனை வந்திருக்கும். அவர் மனதில் எதைப் பற்றியிருப்பார்? மனிதனைப் பற்றிய அதிர்ச்சி, அவநம்பிக்கையுடனே அவர் போய் சேர்ந்திருப்பார் இல்லையா? வெகுநேரம் மீளமுடியவில்லை. இவரை ஒருகாலத்தில் நான் எப்படியெல்லாம் வெறுத்தேன்? எல்லாவற்றுக்கும் நான் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

இனிமேல் போக வேண்டியது எனக்கு மிகப் பிரியமான இடங்கள். கங்கையும், இமய மலையையும் பார்க்கப் போகிறோம். நாளை கிளம்பி விடுவோம். காசி, ஹரித்துவார், டேராடூன். இங்கே கோவில்கள் சலிப்பூட்டுகின்றன. நம்மூர் கரிய அழகிய சிற்பங்கள் இங்கு இல்லை. சிற்பங்கள் மார்பிள் பொம்மைகள் போல. பக்தியே வர மறுக்கிறது.

டூரிஸ்ட் பஸ்ஸில் எங்கள் ட்ரைவர் தேசாப், கயாமத் சே படப் பாடல்களை திரும்பத் திரும்ப போட்டுக் கொல்கிறான். நாங்கள் மிரட்டி ஏக் துஜே கேலியே போட வைத்தோம். மக்கள் பரவாயில்லை. ஆனால் டூரிஸ்ட் இடங்களில் எல்லாம் தமிழர்கள் என்றால் ஒரு வெறுப்புடன் பார்க்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொடிய மரணம் அவர்களால் தாள முடியாததாயிருக்கிறது. எங்களுக்கு பரிசோதனைகளும் அதிகம்.

மூலைக்கு மூலை பீடாவைப் போட்டு துப்புகிறார்கள். நம்மூரிலும் நம் பெரிசுகள் அடித்தொண்டையில் காறி சாலையில் துப்புவது போலத்தான். இங்கு நாங்கள் தங்கியிருப்பது ஒரு வயதான பாட்டி, தாத்தாவின் வீட்டின் மேல்மாடியில். பழைய வீடு. சாலையோர சிறிய ஆலமரம் வீட்டின் மேல் பாதி நிழல் விரித்திருக்கிறது. அப்படியும் உஷ்ணம் தாங்கவில்லை. மாலையில் மொட்டைமாடியில் போய் குடம் குடமாக தண்ணீர் ஊற்றிவிட்டு வருவோம். சாக்கையும் போட்டு பரத்திவிட்டு.

அந்தப் பாட்டியும் தாத்தாவும் மொழி புரியாவிட்டாலும் அவ்வளவு அன்போடு எங்களிடம் சைகையால் பேசுகிறார்கள். இருவரும் ஆதர்ச தம்பதிகள். நாம் வயதானால் அப்படி இருக்கவேண்டும் என்று கற்பனை செய்துகொண்டேன். கீழே அந்த ஆலமரத்தடியில் ஒரு சாய் வாலா. பதினெட்டு வயது துறுதுறு பையன் ஜெயன். ஒரு பெரிய பெஞ்ச், ஒரு சிறிய பெஞ்ச். ஒரு கும்மட்டி அடுப்பு, கெட்டில், பாத்திரங்கள். முட்டையை அவித்து உடைத்து மிளகுத் தூள் தூவி தருவான். அதனுடன் டீ. மிக அருமை. சர்க்கரையை அள்ளி கொட்டுவதில்லை. அவனிடம் மாலை நேரங்களில் வண்டியை நிறுத்தி வரிசையில் நின்று குடித்துப் போகிறார்கள். பத்துக் கைகள் உள்ள மாதிரி பரபரப்பான். அவன் சுறுசுறுப்பையும் புன்னகையுடன் வாடிக்கையாளர்களை கவனிப்பதையும் நான் மாடியில் இருந்து கவனிப்பேன். அது எனக்குப் பிடித்த பொழுதுபோக்கு. நாங்கள் அவனிடம் பையா என்று அழைத்து அடிக்கடி டீ குடிப்போம். தீதீ என்று எங்களை அழைப்பான்.

இரவில் உறக்கம் வர மறுக்கிறது, ஜெயன். படுத்தவுடன் நினைவுகளாய் என்மேல் கவிந்து கொள்கிறாய். எப்படி இருக்கிறாய்? என்னை எப்போதெல்லாம் நினைக்கிறாய்? கடிதம் இல்லாமல் தவித்துப் போவாய் என்றுதான் இதை விரிவாக எழுதுகிறேன். இனிமேல் எழுத சந்தர்ப்பம் வாய்க்காது. அடுத்த வாரம் வந்துவிடுவேன். வந்த அந்த சனியன்று எங்களுக்கு விடுமுறைதான். எல்லோரும் ஊருக்குப் போவார்கள். எனக்கு உன்னைப் பார்க்க வேண்டும். கண்டிப்பாக வா. கட்டிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. அன்பு முத்தங்கள். உன் அருணா.

அந்த சனிக்கிழமை ஜெயன் பலவித திட்டங்கள், யோசனைகள் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு கரும்பச்சை கலரில் பட்டுப்புடவை  சு.ரா வின் சுதர்சன் கடையில் எடுத்து விட்டதாகவும், சுராவின்  செலக்‌ஷன் தான் அந்த கரும்பச்சை கலர் என்றும், மூன்று பவுனில் செயினும் தாலியும் வாங்கி விட்டதாகவும் ஜெயன் சொன்னார். எனக்கு பெருமிதம் தாளவில்லை.

ஜெயன், உண்மையிலேயே நீங்க பொறுப்பான மாப்பிள்ளைதான். இத்தன நாளா வேற என்ன உருப்படியான விஷயம் பண்ணீங்க?

நான் போட்டிக்கு அனுப்புன எல்லா கதைகளுக்கும் முதல்பரிசுதான். நெறய பணம் வந்துச்சு. ஏற்கனவே என் ஃப்ரெண்ட் குப்புசாமிகிட்ட சீட்டு போட்டிருந்தேன், சொன்னேன்ல.

யார்? அந்த மாரண்டஹள்ளிகாரரா?

ஆமா, அதை எடுத்து கட்டில், மெத்த ,ஃபேன், அத்யாவசிய பாத்திரங்கள், ஒனக்கு இன்னும் அஞ்சு பொடவ எடுத்தேன். குக்கர், மிக்ஸி மட்டும் ஆடித்தள்ளுபடில வாங்கலாம்னு ஒல்லி ரமேஷ் சொன்னான். அது வாங்கிடுவேன். எல்லா பர்ச்சேசுக்கும் அவந்தான் வந்து ஹெல்ப் பண்ணான்.  காஸ் புக் பண்ணியிருக்கேன். அது கனெக்‌ஷன் கெடைக்க ஆறுமாசம் ஆகும் அருணா. அதுவர கெரொசின் ஸ்டவ்தான். அதுல சமைக்க தெரியுமா, ஒனக்கு?

ம்ம், எங்க வீட்ல நாலு வருஷமா தான் காஸ். அதுக்கு முன்ன வெறகடுப்பும், கெரொசின் ஸ்டவ்வும்தான் ஜெயன். என்ன கேட்டீங்க? சமைக்கவா? வென்னீர் போடுவேன், டீ, காஃபி, முட்ட ஆம்லெட், உருளக் கெழங்கு வறுவல், சாதம் வடிப்பேன், சாம்பார், ரசம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்கள்ள? காதலி கையால கஞ்சி குடுத்தாலும் அமிர்தம்னு சொல்லிட்டு குடிக்கணும்.

கட்டுனா அப்றம் என்ன காதலி, பொண்டாட்டிடி, கழுத.

தாலி என்ன டிசைன், ஜெயன்?

அது எனக்கு தெரியாததால எங்க மலையாள தாலி வாங்கிட்டேன். அரசிலை. ஹார்ட் ஷேப்ல இருக்கும். செயினும் எங்க ஊர்ல ஒல்லியா தான் போடுவாங்க. ஒங்களை மாதிரி கனத்த தாலி செயின் போட மாட்டாங்க.

ஒல்லி செயின்தான் எனக்கு புடிக்கும். எங்க ஊர்ல மாட்டுக்கு போடற தாம்புகயிறு மாரி போட்டுகிட்டு திரியுங்க. நான் இப்ப போட்டுருக்கேன் பாருங்க. இது ஒன்ற பவுனுதான். ஒம்பதாவதுலேர்ந்து போட்டுருக்கேன். கழுத்தோட கடக்கும் எப்பவும்.

நீ வரும்போது அதை கழட்டி வீட்ல வச்சுட்டு வந்துரு. ஆகஸ்ட் 17 கிளம்பி வா. மறுநாள் நல்லநாள் . நம்ம கல்யாணம். ட்ரெஸ் அதிகம் எடுத்துக்காத. சந்தேகம் வரும். செர்டிஃபிகேட்ஸ் வாங்க மதுர  போறதா சொல்லிட்டு வா. லெட்டர்ஸ், கையில உள்ள மத்த மார்க் ஷீட்ஸ், செர்டிஃபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடு.

ஏன் செயின கழட்டணும்?

அறிவுக்கொழுந்து. செயினுக்காக என் பொண்ண கடத்திட்டான்னு ஒங்க அப்பா கேஸ் கொடுக்கவா? வம்பு.

சரி… திக் திக் ன்னு இருக்கு ஜெயன். அங்க போனப்ப எல்லா சாமிகிட்டயும் இதான் உருக்கமா வேண்டுனேன்.

பயப்படாதே. ஊர்ல ஒனக்கு ஏதாவது பிரச்சனன்னா எனக்கு ஒடனே தெரியப்படுத்து. சின்ன லெட்டரோ, தந்தியோ கொடுத்துடு. நான் பாத்துப்பேன்.

’’கண்ண மூடுங்க’’, அவர் கையில் நான் வாங்கி வந்த ஒரு சந்தன நிற அழகிய பேனாவையும் ஒரு பென் ஸ்டாண்டையும் வைத்தேன்.

’’நல்லாருக்கு’’, என்று சரியாகக் கூட பார்க்காமல் ஓரமாக வைத்தார்.

கொஞ்சம் கூட ரசனயே இல்ல. சரியாக் கூட அதப் பாக்கல நீங்க.

எனக்கு இதெல்லாம்விட டெல்லிலேர்ந்து நீ போட்ட லெட்டர்தான் பரவசமா இருந்துச்சுடி. ரொம்ப நெனச்சுகிட்டியா?

ம்ம்.. இனிமே இப்டி பாக்க முடியாது ஜெயன். அடுத்தவாரம் ஊருக்கு போறேன். பாதி திங்ஸ் அங்க கொண்டு போட்டுட்டு வருவேன். கடசி ரெண்டு வாரம் ஃபைனல் எக்ஸாம். போலமா? நேரம் ஆயிடுச்சி. இந்த கொளத்தாங்கரையும், இந்த மரத்தடியும் நம்ம காதலின் சாட்சிகள், இல்ல? இனிமே இது ரெண்டும் நம்ம மெமரில மட்டும் தான்.

அருணா, இன்னும் கொஞ்ச நேரம்.

இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒரு யுகத்து சிந்தனைகள் அந்த ஒரு கணத்தில் நிகழ்வதுபோல. எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டுமே என்று என் இதயம் துடித்தது. ஏதும் தவறாகப் போய்விடக் கூடாது. அப்படி ஆகிவிட்டால் எனக்கு ஒருவழிதான் தெரிந்தது. என்னை மாய்த்துக் கொள்வது. கண்கலங்கி என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஜெயன் கலங்கிவிட்டார். ’’ஏண்டி, பயப்படுறியா? நமக்கு நல்லதுதான் நடக்கும் அருணா’’. அணைத்து முத்தமிட்டு தேற்றினார். விசும்பலுடன் விடைபெற்றேன்.

அடுத்தடுத்த வாரங்கள் றெக்கை கட்டிப் பறந்தன. தேர்வு முடிந்து, படிப்பு முடிந்து எங்கள் கல்லூரி வளாகத்தை விட்டுப் பிரிவதும், தோழிகளைப் பிரிவதும் இம்சையாக இருந்தது. நான்கு வருடங்கள். சைக்கிளில் கல்லூரிக்குள் சுற்றிய பிளாக்குகள், பழப்பண்ணை, நடைமுறை வகுப்புகள் நடந்த லேப்புகள், லைப்ரரி, வகுப்பறைகள், நூலகம், அழகிய சாலைகள், வயல்கள், ஆடிட்டோரியம்,கல்லூரிப் பேருந்துகள், கத்தி சண்டைபோட்டு விளையாடிய விடுதியறைகள், ஓடிப்போய் ஒலியும் ஒளியும் , மஹாபாரதம் பார்த்த தூர்தர்ஷன் மட்டுமே தெரியும் கலர் டிவி, மனமகிழ் மன்ற அறை என நினைவுகள் கொட்டிக் கிடந்தன.

வீட்டில் எப்போதும் போல் மௌனம் கனத்திருந்தது. தம்பி வந்திருந்தான். யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. நாட்கள் ஓடின. அம்மாவும் அப்பாவும் பள்ளி சென்றதும் தம்பியும் வெளியில் கிளம்பி செல்வான். நான் தனிமையில் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். கடிதங்களை என் பெட்டியில் புத்தகங்களுக்கு அடியில் ஒளித்து வைத்து பூட்டி சாவியை யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளித்திருந்தேன்.

அப்பாவிடம் ‘செர்டிஃபிகேட்ஸ் விரைவில் கொடுத்து விடுவார்கள். போய் வாங்க வேண்டும்’ என்று கூறி வைத்தேன். அப்பா சரியென்றார். அப்பா கவலையில் இருந்தார். தம்பி அவனுடைய ஒருவருட படிப்பை வீணாக்கியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் எதிர்காலம் பற்றிய கவலை அவரை அரித்தது. எனக்கு குற்ற உணர்வு கூடி வந்தது. இந்நிலையில் நானும் அப்பாவுக்கு பெரிய இடியை தரப்போகிறேனே என்று அவ்வப்போது மறுகினேன்.

அம்மா மெல்ல’’ பாப்பா, ஒனக்கு நக வாங்கணும். அடுத்தவாரம் தஞ்சாவூர் போலாமா’’ என்றாள்.

’’இப்ப என்ன அவசரம் ஒனக்கு, அப்பா கவலையில இருக்காங்க. கொஞ்ச நாள் போவட்டும்”’ என்று ஆத்திரத்துடன் சொன்னேன்.

அன்று காலை ஏதோ விஷயத்துக்காக எனக்கும் தம்பிக்கும் சண்டை வந்தது. அவன் என்னை தனியே அழைத்துப் போய் எச்சரிப்பதுபோல் சொன்னான். ’’அம்மா, அப்பாவுக்கு ஒன் விஷயம் தெரியாது. எனக்குத் தெரியும். அந்த பெட்டில இருக்குற லெட்டர்ஸ் வெளில தெரிஞ்சா எல்லாம் நாறிப் போய்டும். என்னிக்காவது தெரியாம போகாது’’ என்று தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு நடுக்கம் வந்தது. நான் ஒரு சொல்லும் சொல்லாமல் நிராதரவாக அவனைப் பார்த்தேன்.

அவன் முன்பு மாதிரியில்லை. பதினொன்றாம் வகுப்பிலிருந்து தகாத மாணவர்களின் சேர்க்கையால் ஆளே மாறிப் போயிருந்தான். பத்தாம் வகுப்புவரை என்னையே சுற்றிவரும் அந்த கல்மிஷமில்லாத சிறுவன் அவனில் இருந்து மாயமாகி இருந்தான். இவன் முற்றிலும் வேறு என்பதுபோல் ஒரு கலக்கத்தை என்னுள் உண்டுபண்ணினான்.

அன்று ஆகஸ்ட் 7. மூவரும் வெளியில் சென்றபிறகு நான் தீவிரமாக யோசித்தேன். கடிதங்களுடன் நான் கையும் களவுமாக பிடிபடுவதாகவும், என்னை திருவோணத்தில் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் சிறைவைப்பது போலவும், அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து எனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைப்பது போலவும் காட்சிகள் மனதில் வந்தன. அதற்கு என் வீட்டில் இரண்டு முன்னுதாரணங்கள் இருந்தன. என் இந்திரா அத்தை ஒருவரைக் காதலித்தபோது அவர் வேறு ஜாதி என்பதால் என் அப்பா கண்டிக்க அது போய் வயலில் இருந்த நல்ல தண்ணீர் கிணற்றில் குதித்து விட்டது. பிறகு காப்பாற்றி அதை திருவோணத்தில் சிறை வைத்தனர். எங்கள் தூரத்து சொந்த மாமா ஒருவர் போலீசில் வேலைசெய்தார். அத்தையை அவருக்கு கட்டிவைத்தனர். அவர் சரியான குடிகாரர். அதன் வாழ்க்கை நரகமானது.

இன்னொரு உதாரணம் என் ஒன்றுவிட்ட அத்தை அமராவதி .அது ஆசிரியையாக காரியாவிடுதியில் பணிபுரிந்தபோது அங்கு வேளாண் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த அலுவலருடன் காதல் வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள வேறு  ஒரு சமூகத்தை சேர்ந்தவர். உடனே என் தாத்தா அத்தையை நீண்டவிடுப்பு எடுக்கவைத்து வீட்டுக்காவலில் வைத்து அவசரமாக மாப்பிள்ளை பார்த்தார். ஆனால் என் அத்தையை காதலித்த அவர் வெட்டுகுத்துக்கு பேர் போன சமூகத்தை சார்ந்தவர். ஒரு காரில் நான்கு ஆட்களும் அரிவாளுமாக வந்து எங்கள் தாத்தா வீட்டு வாசலில் நின்று ’’அமராவதி, எறங்கி வா’’ என்று குரல் கொடுத்தார். என் அத்தை ஏற்கனவே தயாராக எடுத்துவைத்த சூட்கேஸோடு வீட்டைவிட்டு இறங்கி பதவிசாகப் போய் காரில் ஏறிக்கொண்டது. எங்கள் வீட்டு வீரத் திருமகன்கள் எல்லோரும் வாயடைத்து நின்றனர். புதுக்கோட்டையில் அவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது.

இதையெல்லாம் யோசிக்கையில் எனக்கு உள்ளங்கை வியர்த்தது. படபடவென்று மயக்கம் வருவதுபோல் இருந்தது. எந்த நேரத்திலும் தம்பி சொல்லிவிடலாம். அவனை நம்பமுடியாது. நான் கிளம்ப முடிவெடுத்தேன். அந்த பரபரப்பிலும் நிதானமாக யோசித்தேன். அப்பாவிற்கு இரண்டு வரியில் ஒரு குறிப்பு எழுதினேன். ’சான்றிதழ்கள் வாங்க வருமாறு அழைப்பு வந்துள்ளது. நான் மதுரை செல்கிறேன். இருநாட்களில் திரும்பி விடுவேன்’ என்று. நான்கு புடவைகள், அத்யாவசியத் துணிகள், சான்றிதழ்கள், அனைத்து கடிதங்கள், என்னிடம் மீதமிருந்த பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டேன். பெட்டியிலோ சூட்கேஸிலோ கொண்டுபோனால் சந்தேகம் வரலாம் என்பதால் லெதர் பேக்கில் எடுத்துக் கொண்டேன்.

கழுத்து செயினை கழற்றி வைத்து சென்றாலும் சந்தேகம் வரலாம் . அதனால் அதைப் போட்டுக் கொண்டேன். காலை உணவு சாப்பிட்டு வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து மதுரை செல்வதாக சொல்லிக் கிளம்பினேன். ஜெயனுக்கு தகவல் கொடுக்க தொலைபேசி நிலையம் சென்று பேசலாம் என்று நினைத்த மறுகணமே என் அப்பா வேலை பார்க்கும் பள்ளியை அடுத்து அது இருப்பது நினைவுக்கு வந்தது. தலைமைதபால் நிலையமும் அங்குதான் இருந்தது. அங்கு சென்று தந்திகொடுத்தால் அதுவும் ஆபத்து. அப்பாவிற்கு தெரிந்த நிறைய ஊழியர்கள் அங்கு இருந்தனர். அடுத்த பஸ் பிடித்து அப்பா வந்துவிடலாம்.

ஆகவே நேரெதிர் திசையில் சென்று பஸ் நிலையத்தை ஒட்டியிருந்த சிறிய தபால் அலுவலகம் போய்’’ இங்கு தம்பியால் பிரச்சனை. கிளம்பிவிட்டேன். இன்று மாலை தருமபுரி வருவேன். அருணா.’ என்று ஜெயனுக்கு தந்திகொடுத்தேன். ஜெயன் என்ன நினைப்பார்? குழம்புவாரா? ஆனால் சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. ஆபத்து வரும்வரை காத்திருக்காமல் எடுத்த புத்திசாலித் தனமான முடிவு என்றுதான் நினைப்பார். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து யாரேனும் தெரிந்தவர்கள் உள்ளனரா என்று பார்த்தேன். யாரும் இல்லை. ஏனெனில் நான் மதுரைக்கு பதிலாக தஞ்சாவூர் அல்லவா செல்கிறேன். அங்கிருந்து திருச்சி, திருச்சியிலுருந்து சேலம், பிறகு தருமபுரி.

பேருந்து நகர ஆரம்பித்து காற்று முகத்தில் பட்டதும்தான் படபடப்பு குறைந்தது. ஆனால் சிறிதுதூரம் சென்றதும் நினைவுகள் பின்னோக்கி சென்றன. அப்பா, அம்மாவை பொய்சொல்லி ஏமாற்றிய குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றுகொண்டிருந்தது. என் பாட்டிகள், தாத்தா, அத்தை, மாமா பிற சொந்தங்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டேன். எல்லோரையும் என்றென்றைக்குமாக இழக்கவேண்டி வருமோ என்ற எண்ணம் மனதைப் பிசைந்தது. எனக்கு வேறு வழியுமில்லை. எல்லா தெய்வங்களையும் வேண்டினேன். பிறகு சமாதானம் ஆகிவிடவேண்டும் என்று. கண்ணீர் என்னையறியாது கன்னத்தில் வழிந்து பேருந்தின் காற்றில் உலர்ந்துகொண்டிருந்தது. ’என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று மனம் பிதற்றியது.

ஆனால் ஜெயனின் நினைவு எனக்கு ஆறுதல் அளித்தது. அவருக்காக உலகையே நிகர்வைக்க என் மனம் தயாராக இருந்தது. துலாக்கோலின் ஒரு தட்டில் அவரை வைத்தால் மறுதட்டில் எதைவைக்கவும் நான் சித்தமாக இருந்தேன். என் அனைத்து சொந்தங்களையும், ஆசை, அபிலாஷைகளையும் கூட. என் உடல்,பொருள், ஆவி அனைத்தையும். காதலின் வல்லமையை அதுவரை நான் காவியங்களில்தான் கற்றிருந்தேன். அதை முழுமையாக உணர்ந்தது அந்நாட்களில்தான்.

அடுத்தடுத்த பேருந்துகளில் களைப்பினால் தூங்கிவிட்டேன். இடையில் சாப்பிடவில்லை. திருச்சியில் இறங்கி ஒரு தேனீர் மட்டும் குடித்தேன். மாலை ஒரு நான்கு மணிபோல சேலம் சென்று இறங்கியபோது நல்ல மழை. அப்போது இப்போதைய பெரிய பேருந்துநிலையம் இல்லை. சேலத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் அப்போது இருந்தன. திருச்சி பஸ் என்னைக் கொண்டு விட்ட நிலையத்தில் தருமபுரி பஸ் வராது என்றனர். நான் அங்கு விசாரித்து வேறு ஒரு டவுன் பஸ் பிடித்து இந்த சிறிய பஸ் நிலையம் வந்தேன். மழைக்கு ஒதுங்கிய நிறையபேர் ஒரு சிறிய ஒதுங்குமிடத்தில் முண்டியடித்தனர். நானும் போய் அவர்களுடன் நின்றுகொண்டேன்.

பத்தே நிமிடத்தில் தருமபுரி, தருமபுரி என்று நடத்துநர் கூவியபடி ஒரு பேருந்து வந்து நின்றது. அதில் இடம் இருந்தது. நனைந்தபடியே ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டேன். காதடைக்கும் சத்தத்துடன் பாடல் ஒலிக்க அந்தபஸ் அதிவேகமாக சென்றது. சிறிதுநேரத்தில் பாடல் நின்றது. மழையில் நனைந்த மலைகளும், அந்த ஈரமான சாலைகளும் என் மனதில் ஆசுவாசத்தையும், அமைதியையும் கொண்டுவந்தன. என் ஜெயனை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சற்றுநேரம்தான். என் வாழ்நாள் முழுவதும் என் இனியவனின் அருகிலிருப்பேன்.

தருமபுரி பேருந்துநிலையத்தில் இறங்கி தொலைபேசி நிலையத்தின் வழியை விசாரித்தேன். நேர்ச்சாலையைக் காட்டினார்கள். இத்திசையில் சென்றால் பெரிய கட்டிடம் அதுதான். அருகில்தான் என்றனர். வாசலில் ஒரு சீருடை அணிந்த ஒருவர் ’நீங்கள் யாரைப் பார்க்கவேண்டும்’ என்றார். ’ஜெயமோகன்’ என்றதும் ஒரு பேரேட்டைக் காட்டி அதில் பேர் எழுதி ஒப்பம் இட்டு உள்ளே போகச்சொன்னார்.

மாடியில்தான் அலுவலகம் இருந்தது. அது மூன்றுமாடிக் கட்டிடம். நான் சென்றதும் அங்கு ஒரு அட்டெண்டர் இருந்தார். அவரிடம் நான் ’ஜெயமோகனைத் தேடிவந்திருப்பதாக கூறி அவரை பார்க்கவேண்டும் ’என்றேன். அவர் ’ஜெயமோகன் மதியம் ஒரு மூன்று மணிக்கு வெளியில் சென்றார். இப்போது இங்கு இல்லை’ என்றார். எனக்கு ஒரு சிறிய ஏமாற்றம் வந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் ’’ஏ. ரமேஷ் இருக்கிறாரா?’’ என்றேன். ஏ.ரமேஷ் ஜெயனின் நெருங்கிய நண்பர் என்று எனக்குத் தெரியும்.’’ இருக்கார். கூப்பிடுறேன்’’ என்றவர் ரமேஷை அழைத்து வந்தார். அவர்தான் ஜெயனுக்கு நான் பதிலாக அனுப்பிய காதல் தந்தியைப் பார்த்து கிண்டலடித்தவர்.

வெளியில் வந்தவர் மிகுந்த பரிச்சயமானவர் போல என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

வாங்க, மோகன் ஒங்க தந்தியப் பார்த்து மூணுமணிக்கு கிளம்பி சேலத்துக்குப் போனான் ஒங்கள ரிசீவ் பண்ண.

நான் வரும்போது நல்ல மழ. ஒடனே பஸ் ஏறிட்டேன்.

சரி, வாங்க. இங்க லேடீஸ் டோர்மெட்ரில வெயிட் பண்ணுங்க. வந்துருவான்.

நான் போய் அங்கு அமர்ந்துகொண்டேன். அங்கு யாரும் இல்லை. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து அமர்ந்துகொண்டேன். எனக்கு அந்த அட்டெண்டர் தேனீர் கொண்டுவந்து தந்தார். குடித்ததும் தெம்பாக இருந்தது. நான் அங்கு கிடந்த பத்திரிக்கைகளை புரட்டியபடியே காத்திருந்தேன். ஏழுமணி ஆகியது. ரமேஷ் வந்து ’’அவன் அங்குதான் காத்து நிற்கிறான் போலிருக்கிறது. நீங்கள் இனி இங்கு இருக்கவேண்டாம். என் வீட்டில் கொண்டு விடுகிறேன். என் அம்மா, அப்பா இருவரும் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு காத்திருங்கள். நான் அவன் வந்தவுடன் அழைத்துவருகிறேன்”’ என்றார்.

ரமேஷ் வீடு அருகிலேயே இருந்தது. நடுவில் அங்கணம் வைத்த வீடு. ரமேஷின் அம்மா எனக்கு காஃபியும், தின்பண்டமும் தந்தார். ரமேஷின் அம்மாவும் அப்பாவும் என்னைக் கேள்விகளால் துளைத்தனர். வீட்டிற்கு தெரியாமல் வந்த ஒரு பெண்ணை இச்சமூகம் எப்படிப் பார்க்குமோ அப்படியே இருந்தது அவர்கள் பார்வையும் மனோபாவமும். சிறிய ஒரு குற்றவுணர்வும் சங்கடமும் எனக்கு வந்தாலும் பொறுத்துக் கொண்டேன். நேரம் மெதுவாக ஊர்வதுபோல் எனக்குத் தோன்றியது.

ஒரு எட்டேமுக்கால் மணி இருக்கும். வாசலில் பேச்சுக்குரல்கள். வேகமாக திண்ணையை நோக்கி சென்றேன். ஜெயன் உள்ளேவந்தவர் என்னைப் பார்த்து விரைந்துவந்தார். அருகில் சென்றதும் சூழல் மறந்து என்னைத் தழுவிக்கொண்டார். பக்கத்திலேயே ரமேஷும், அவர் தந்தையும் இருப்பதை உணர்ந்து நான் விடுவித்துக்கொண்டேன். சிறிதுநேரத்தில் அங்கிருந்து ஒரு காரில் ரமேஷின் அக்கா லக்‌ஷ்மி அவர்கள் இருக்கும் செந்தில் நகருக்கு சென்றோம். ரமேஷ் அக்காவின் கணவர் எங்களை அழைத்துசென்றார். ரமேஷின் அக்கா கலப்பு திருமணம் செய்துகொண்டவர் வீட்டாரின் சம்மதமின்றி. ரமேஷின் அம்மா, அப்பா இருவரும் மிக ஆசாரமான பிராமணர்கள்.

காரில் போகும்போது ஜெயன் சேலத்தின் முந்தைய பேருந்துநிலையத்தில் எனக்காக காத்திருந்ததையும், பிறகு விசாரித்து இங்கு வரும்போது நேரமாகி விட்டது, நான் கிளம்பியதை அறியாமல் அங்கும் காத்து நின்றதையும், பிறகு மிகுந்த கவலையுடன் தொலைபேசி நிலையம் கூப்பிட்டு ரமேஷிடம் சொல்ல, அவர் நான் ஐந்தரை மணிக்கே இங்கு வந்த தகவலை தெரிவித்ததையும் சொன்னார். ஜெயன் தான் பதறிப்போனதாகச் சொன்னார். உண்மையில் அந்த பதற்றமும், துடிப்பும் அவரிடம் இருந்ததை நான் உணர்ந்தேன்.

 ”’நான் என்ன சின்னப் பிள்ளயா, எனக்கு வரத்தெரியாதா?’’

’’ஒனக்குத் தெரியாது, அந்த பஸ் ஸ்டாண்ட் அவ்ளோ சேஃப் கெடயாது’’

அவர்கள் வீட்டில் சென்றவுடன் நான் மிக இயல்பானேன். லக்‌ஷ்மி மிக அன்பானவர். அவர்கள் வீட்டினரின் அந்நியோன்யம் நம்மை சொந்தம்போல் உணரவைக்கும். அவர்களின் இருகுழந்தைகளோடும் நான் கேரம் விளையாடி சிரித்துக் கொண்டிருந்தேன். ஜெயன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாக் கவலைகளையும், பொறுப்புகளையும் நான் ஜெயனிடம் விட்டுவிட்டேன். அவர்கள் வீட்டு ஃபோனில் இருந்து மாறி, மாறி பலரையும்  அழைத்து மறுநாள் நடக்கவேண்டிய எங்கள் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.

அன்றைய இரவின் தனிமையில் நான் ஜெயனிடம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை சொன்னேன். நான் கிளம்பி வந்ததுதான் புத்திசாலித்தனம் என்றார். கொந்தளிப்பான இரவு அது.

மறுநாள் ஆகஸ்ட் 8. அன்று குளித்துக் கிளம்பி பட்டுப் புடைவை உடுத்து , ஜெயன் வேட்டி சட்டை அணிந்து காமாட்சி கோவில் சென்றோம். அங்கு ஜெயனின் அலுவலக நண்பர்கள் ஒரு பத்துபேர், யூனியன் தலைவர் நாராயணசாமி , லக்‌ஷ்மி வீட்டினர் முன்னிலையில் ஜெயனுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் முழு அர்த்தம் கூடப் புரியாத விளையாட்டுத் தனமான சந்தோஷத்துடன் நான் இருந்தேன்.

 பிறகு சில நண்பர்களுடன் நாங்கள் திருமணப் பதிவு அலுவலகம் சென்றோம். மாலையும், கழுத்துமாக அங்கு போனோம். பதிவு முடிந்து அனைவருக்கும் ஸ்ரீராமா ஹோட்டலில் விருந்து சாப்பாடு. பிறகு ரமேஷ் அக்கா வீடு சென்றோம். போனதும் ஜெயன் என் அப்பாவுக்கும், அவர் அண்ணாவுக்கும் மன்னிப்பு கோரி ஒரு நீண்ட விளக்கக் கடிதம் எழுதினார். அதைக் கொரியரில் சேர்ப்பித்தோம்.

மறுநாள் அதிகாலை கிளம்பி சேலம் சென்று அங்கிருந்து திருச்சூர்க்கு ரயிலில் சென்றோம். ஆற்றூர் ரவிவர்மா வீட்டிற்கு. பத்து நாட்கள் அங்கு. பிறகு நாகர்கோவில் சு.ரா இல்லத்தில் ஒரு பத்து நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்தோம்.

நாகர்கோவிலில் சு. ரா. வீட்டில் தங்கியிருந்தபோது ஜெயனின் அண்ணன் பாலசங்கர் எங்களை நேரில் பார்க்கவந்தார். ஒரு பூங்காவில் வைத்து சந்தித்து பேசினார். ஜெயனும் அவரும் மலையாளத்தில் மாறி மாறி பேசிக்கொண்டனர். ஒரு வார்த்தைகூடப் புரியாமல் நான் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் ஜெயனிடம் கோபமான முகத்துடன் பேசியவர் மெல்ல மெல்ல தணிந்தார். என்னிடம் ஒரு சிறிய புன்முறுவலுடன்’’ ஒண்ணும் பயப்படாதீங்க, ஒங்க அப்பா, மாமா எல்லாரும் சமாதானம் ஆயாச்சு. ஜெயன் எல்லாத்தையும் சொல்லுவான்’’ என்று கூறிக் கிளம்பிவிட்டார்.

நான் மிகப்பெரிய ஆசுவாசம் அடைந்தேன். ஜெயன் எல்லாவற்றையும் விளக்கினார். ஜெயனின் கடிதம் கிடைத்ததும் அப்பாவும் மாமாவும் கிளம்பி தருமபுரி தொலைபேசி நிலையம் வந்திருக்கின்றனர். நாங்கள் அங்கு இல்லையென்பதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். அப்போது நாங்கள் திருச்சூரில் ஆற்றூர் வீட்டில் இருந்தோம். ரமேஷ் அவர்களை ஓர் அறை எடுத்து தங்கவைத்து , ஆற்றூர் வீட்டு தொலைபேசியில் ஜெயனைத் தொடர்பு கொண்டார். ஜெயன் நாகர்கோவிலில் இருக்கும் தன் அண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் அப்பாவிடம் சென்று தருமபுரியில் பேச்சுவார்த்தை நடத்துமாறு சொன்னார்.

அவர் அண்ணன் தருமபுரி சென்று என் அப்பாவிடமும், மாமாவிடமும்  ’’என் தம்பி செய்தது மிகப் பெரிய தவறு. நான் முதலில் உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் பெண்ணை நான் குறை சொல்லவில்லை. அவள் சின்னப்பெண். தம்பி சொல்லிவிடுவான் என்ற பயத்தில் அவள் கிளம்பி வந்திருக்கிறாள்.  இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? என்னிடம் கூட அவன் ஆலோசனை கேட்கவில்லை. எல்லாம் அவசரமாக நடந்துவிட்டது. ஆனால் ஒரு உறுதியை மட்டும் என்னால் கொடுக்கமுடியும். உங்கள் பெண்ணை அவன் தங்கம் போல் தாங்குவான். அவனுக்கு குடி, சிகரெட் எந்த ஒரு கெட்டபழக்கமும் இல்லை. திருமணம் வேண்டாம் என்று காலத்தைக் கடத்தியவன் இப்போது அவனாக விரும்பி செய்து கொண்டதால் நான் சந்தோஷப் பட்டேன். ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்தது மிகப்பெரிய தவறு.’’ என்று கூறினாராம்.

என் அப்பா அவர் சொல்லச் சொல்ல கண்கலங்கி துண்டால் துடைத்துக் கொண்டே இருந்தாராம். கடைசியில் அண்ணாவின் பேச்சில் சமாதானம் ஆகி திருமணம் சொந்தக்காரர்களுக்காக மீண்டும் நடத்தவேண்டும் என்றாராம் அப்பா. அதற்கான ஏற்பாடுகளை நானே செய்கிறேன் என்று இவர் அண்ணா கூற வரவேற்பை மட்டும் பட்டுக்கோட்டையில் வைக்க வேண்டும் என்று அப்பா சொன்னாராம்.

அருணா, என் அண்ணா ஒங்க அப்பாவப் பத்தி என்ன சொன்னார் தெரியுமா? தங்கமான மனுஷண்டா, அவரப் போய் ஏமாத்திட்டியேன்னு. அப்புறம் ஒன்னப் பத்தியும் அவருக்கு திருப்திதான். நல்ல ஃபேமிலிலர்ந்து வந்த பொண்ணு. நல்ல குணமா தெரியுது. நீ படிச்ச பொண்ணு. அதனால என்ன கண்கலங்காம வச்சு காப்பாத்துவன்னு.

அய்யே…ஆளப்பாரு…

எனக்கு அப்பாவும், மாமாவும் சமாதானம் ஆகி சென்றதும், என் அம்மாவையும் அப்பா சமாதானம் செய்து விடுவார் என்று தோன்றியது. நான் என் உறவுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்பது அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது. மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி சொன்னேன் மனதிற்குள்.

செப்டம்பர் 5 அன்று குமாரகோவில் முருகன் கோவிலில் திருமணமும்,  செப்டம்பர் 7 அன்று பட்டுக்கோட்டை மினிப்பிரியாவில் வரவேற்பும் நடந்தது. செப்டம்பர் மூன்றாம் தேதியே எங்கள் பெற்றோர் , நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் நாகர்கோவில் வந்துவிட்டனர்.

அம்மா என்னைப் பார்த்தபோது ’பாப்பா’ என்று அழுதபடி வந்து தழுவிக்கொண்டாள். அப்பாவிடம் நான் மெல்லிய குரலில் ’’எனக்கு வேற வழி தெரியல, சாரிப்பா’’ என்றேன். அப்பா ’’சரி, விடு கழுத’’ என்றார். அத்தையும் மாமாவும் ’’ஒன்ன ஒதைக்கணும்,’’ என்று உரிமையும் கண்டிப்புமாக கூறினர். பார்க்கப்போனால் ஜெயன் என் அப்பாவிற்கு எழுதிய கடிதம் அப்பாவின் கையில் கிடைக்கும் வரை தனக்குத் தெரிந்த எந்த உண்மையையும் என் தம்பி கூறியிருக்கவில்லை. நான்தான் அவசரப்பட்டு அவனைத் தவறாக நினைத்துவிட்டேன்.

உண்மையில் நான் ஜெயனின் பொருட்டு பெருநியதியுடன் எந்த ஆட்டத்தையும் ஆடத்துணியவில்லை. அதன் காலடியில் என்னை முழுவதும் அர்ப்பணித்து சரணடையவே விழைந்தேன். ஆற்றூர் சொன்னது போல் அந்த இரு நெல்லிக்காய்களும் அருகருகே அமைவது பெருநியதியின் பெருங்கருணையால் நிகழ்வதே. வாழ்வெனும் மாபெரும் புதிரான சதுரங்க ஆட்டத்தில் விழும் பகடைகளின் நிகழ்தகவுகள் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டவை, எண்ண ஒண்ணாதவை, எண்ணில் அடங்காதவை. ஆனாலும் பெருநியதி என்னிடம் மிகுந்த கருணையோடிருந்தது, கருணையோடிருக்கிறது, கருணையோடிருக்கும். ஆம், அது அவ்வாறேயிருக்கும்.

***

One thought on “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்பு – 2

Leave a comment